Daily Archives: திசெம்பர் 23, 2012

ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சச்சின் தெண்டுல்கர் அறிவிப்பு

sachin

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணியில் 23 ஆண்டுகளாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் தனது ஓய்வை அறிவித்துள்ளார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், நான் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.  மேலும், உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்று கோப்பையை வெல்லும் கனவினை நினைவாக்கியதில் நானும் ஒரு பங்காக இடம்பெற்றதை ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணி 2015ம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பையை வெல்வதற்கு தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், இந்திய அணி சிறப்பாக  செயல்படுவதற்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளார். பல ஆண்டுகளாக எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

சச்சின் தெண்டுல்கர் 463 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 18463 ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் சச்சின். இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில், 49 சதமும், 96 அரை சதமும் அடித்துள்ளார்.